நாமக்கலில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக புதுமண தம்பதிக்கு நண்பர்கள் அடித்த பிளக்ஸ் பேனர் வைரலாகி வருகிறது.
அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்களுக்கு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களை விடவும், திருமண வீடுகளில் வைக்கப்படும் பேனர்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு ட்ரெண்டாவது வழக்கம். அப்படித்தான் நாமக்கலில் ராம்குமார் – சந்தியா திருமணத்தில் நண்பர்கள் வைத்த வாழ்த்து பிளக்ஸ் வைரலாகி வருகிறது.
இன்று முகூர்த்த நாளை முன்னிட்டு, நாமக்கல் முதலைப்பட்டி நகராட்சி மண்டபத்தில் ராம்குமார் – சந்தியா திருமணம் நடைபெற்றது. கொரோனா வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி நடந்த இந்த திருமணத்தில், மாப்பிள்ளையின் நண்பர்கள் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் வைத்த பேனர் அப்பகுதியினரை மிகவும் கவர்ந்தது. கல்யாண பேனரில் ‘நான் தான் கேட்டுக்கு பூட்டு போட்டவன்’ என நகைச்சுவை நடிகர் கவுண்டமணி படமும் நான் தான் பொண்ணோட இதயத்துக்கு பூட்டு போட்டவன் என்று நகைச்சுவை நடிகர் செந்தில் படமும் இடம் பெற்றுள்ளது. மேலும் பிக்பாஸ் லோகாவுடன் இரண்டு பேர், லைப் லாங்க் ஒரே வீட்டில்… ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது என காமெடி வாசகங்களுடன் பதிவிட்டு கலக்கியுள்ளனர்.