பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையை நாடுவோர் மத்தியில், கேரள துணை ஆட்சியர் தர்மலா ஸ்ரீக்கு சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்ததுள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்த தர்மலாஸ்ரீ. ஆத்தூரில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் சோனா கல்லூரியில் பி.டெக். ஃபேஷன் டெக்னாலஜி முடித்து யூபிஎஸ்சி தேர்வு எழுதினார். நான்கு முறை தோல்வியடைந்த இவர் 2018ஆண்டு நடைபெற்ற தேர்வில் அகில இந்திய அளவில் 409ஆம் இடத்தையும், தமிழக அளவில் 10ஆம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார்.
தற்போது கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்ட துணை ஆட்சியராக பணிபுரிந்து வருகின்றார்.
தர்மலாஸ்ரீக்கும், இதய அறுவை சிகிச்சை மருத்துவர் தாமரைக்கண்ணனுக்கும் திருமணமான நிலையில், தற்போது சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனையை நாடும் மக்களின் மத்தியில் சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக் கொண்ட துணை ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.