முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழகம் முழுவதும் வசித்து வரும் நாடோடி பழங்குடிகளுக்கு அடையாளம் உருவாக்கும் பொருட்டு, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்க உத்தரவிட்டது.
அதன்படி, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தை வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வந்த 54 நாடோடி பழங்குடிகள் குடும்பத்தில் தகுதியுள்ள 36 பேருக்கு முதற்கட்டமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.மூன்று தலைமுறை போராட்டத்துக்குப் பின் அரசால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட முதல் அடையாள அட்டை என்பதால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதை நாடோடி பழங்குடிகள் குடும்பத்தினர் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர்.இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளான இன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. முதல் முதலாக வாக்குரிமை பெற்ற நாடோடி பழங்குடிகள் குடும்பத்தினர் 36 பேருக்கும் போல் பேட்டையில் உள்ள கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, காலை 9.30 மணிக்கு குடும்பமாக வாக்குச்சாவடிக்கு வந்திருந்த நாடோடி பழங்குடிகள் சமூகத்தினர், அங்கு வரிசையில் நின்று தங்கள் முதல் வாக்கை பதிவு செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.