இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இன்று தொடங்கி அடுத்த மாதம் வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தி கிரேட் காளி (திலீப் சிங் ராணா) பாஜகவில் இணைவதற்காக தலைநகர் டில்லியில் உள்ள பாஜக அலுவலகத்துக்கு இன்று வந்தார். தொடர்ந்து அவர், பாஜக உறுப்பினராக சேர்ந்தார்.மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னிலையில் திலீப் சிங் ராணா பாஜகவில் இணைந்தார். பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அவர் கட்சியில் இணைந்திருப்பது பாஜகவுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக பல பெரிய நட்சத்திரங்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.
பஞ்சாபி நடிகை மஹி கில் இந்த வார தொடக்கத்தில் பாஜகவில் இணைந்தார். விளையாட்டு உலகிலும், வெளிநாடுகளிலும் இந்தியாவின் பெயரை பதித்த காளி தற்போது தனது அரசியல் பயணத்தை பாஜகவில் தொடங்குகிறார்.பஞ்சாப் காவல்துறையில் ஏஎஸ்ஐ ஆக இருந்துள்ள அவர், ஜலந்தரில் மல்யுத்த அகாடமி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.