• Mon. Apr 29th, 2024

ரமணி Vs ரமணி மீண்டும் புதிய சீசனாக ஒளிப்பரப்பாகிறது

தமிழ்ச் சின்னத்திரை வரலாற்றில் ப்ளாக் பஸ்டர் வெற்றித் தொடராக அமைந்த ‘ரமணி Vs ரமணி’ திரைத் தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாகிறது. இந்தப் புதிய தொடருக்கு ‘ரமணி Vs ரமணி 3.0’ என தலைப்பிடப்பட்டுள்ளது.ஒரு திரைத் தொடர் வரலாற்றின் தலை சிறந்த படைப்புகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ நிகழ்வுகள் எப்போதாவதுதான் நிகழும், ஆனால், பல ஆண்டுகளுக்கு பிறகும் அது பார்வையாளர்களின் விருப்பப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும். அப்படியொரு இடத்தைப் பிடித்ததுதான் ‘ரமணி Vs ரமணி’ தொடர்.தமிழ்ச் சின்னத்திரை வரலாற்றில் மாபெரும் சாதனைகளைப் படைத்த கவிதாலயா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தொலைக்காட்சி பிரிவான ‘மின் பிம்பங்கள்’ நிறுவனம் தயாரித்த இந்தத் தொடர் இன்றுவரையிலும் நகைச்சுவை தொடர்களில் வரிசையில் உச்சத்தில் இருந்து வருகிறதுசின்னத்திரையில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை தந்ததோடு அல்லாமல், இப்போதும் ஆன்லைன் தளங்களிலும் ஒரு அற்புதமான அனுபவத்தை தொடர்ந்து தந்து வருகிறது இந்த ‘ரமணி Vs ரமணி’ தொடர்.‘குடும்ப டிராமா’ என்ற அடிப்படைக் கருவில் மிகச் சிறப்பான நகைச்சுவை தூவப்பட்டு, அட்டகாசமான வகையில் உருவாக்கப்பட்ட இத்தொடர், இன்றும் உலகளாவிய ரசிகர்களின் விருப்பமிகு தொடராகவே அமைந்துள்ளது.இந்தத் தொடரின் இரண்டு சீசன்களும் பிளாக் பஸ்டர் ஹிட் ஆன நிலையில், தற்போது மீண்டும் இத்தொடர் ‘ரமணி Vs ரமணி 3.0’ என்ற புதிய மூன்றாவது சீசனுடன் வரவுள்ளது.இந்தத் தொடரில் இரண்டாவது சீஸனில் நாயகனாக நடித்த நடிகரான ராம்ஜி மீண்டும் ‘மிஸ்டர் ரமணி’யாக நடிக்கிறார். முதல் சீஸனில் மிஸஸ் ரமணியாக நடித்த நடிகை வாசுகி ஆனந்த் மீண்டும் இந்த சீஸனிலும் ‘மிஸஸ் ரமணி’யாக நடிக்கிறார். இவர்களது மகள் ‘ராகினி’யாக பொன்னி சுரேஷ் நடிக்க, மகன் ‘ராம்’ வேடத்தில் பரம் குகனேஷ் நடிக்கிறார்.கோபு பாபு, பரத், விக்னேஷ்வரி ஆகியோர் இணைந்து திரைக்கதை, வசனம் எழுதுகிறார்கள். சதீஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ரெஹான் இசையமைக்கிறார். சிவா யாதவ் கலை இயக்கம் செய்கிறார். முதல் 2 சீஸன்களையும் இயக்கிய இயக்குநரான நாகாவே இந்த சீஸனையும் இயக்கியுள்ளார்.
இந்தப் புதிய சீசன் குறித்து இயக்குநர் நாகா பேசும்போது, “குடும்ப வாழ்க்கை என்பது ஏற்றத் தாழ்வுகள், கண்ணீர் தருணங்கள் மற்றும் மகிழ்ச்சிகள் நிறைந்தது. எந்தக் குடும்பத்திலும் இதுதான் அமைப்பாக இருக்கும். இந்தப் பொதுமை என்பது புவியியல் எல்லைகளை மட்டுமல்ல, இனம், மதம், சாதி அல்லது மதம் ஆகியவற்றைக் கடந்தது.
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியக் குடும்பங்கள் சில விஷயங்களில் தனித்துவமானது. தாத்தா, பாட்டி, மகன்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அனைவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு வேகமாக மறைந்து வந்தாலும், ஒவ்வொருவரின் வாழ்விலும் இந்த உறவினர்கள் செலுத்தும் வலுவான செல்வாக்கினால் ஏதாவது பாதிப்புகள் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றது.அதனால் மக்கள் இன்றைக்கும் தனித்தனியாக வேறு, வேறு இடங்களில் வாழ்ந்தாலும், கூட்டுக் குடும்ப மனநிலையில்தான் வசித்து வருகின்றனர்.இத்தகைய சூழ்நிலையில் வாழும் குடும்பங்களுக்கு, வெளி உலகத்திலிருந்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தவிர, ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் இருக்கும் ஈகோ மோதல்கள், தலைமுறை இடைவெளிகள், இணக்கமின்மை, டீனேஜ் துயரங்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு போன்ற பிரச்சினைகள் பல உள்ளன. அவற்றை இந்தத் தொடர் அட்டகாசமான நகைச்சுவை பாணியில் தரும்…” என்றார்.தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி பேசும்போது, “ஒரு தயாரிப்பாளராக, எங்களின் ஆல் டைம் ஹிட் தொடரான ‘ரமணி Vs ரமணி’யின் புதிய சீசனை உருவாக்குவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆன்லைன் தளங்களில் இந்தத் தொடருக்கு கிடைத்த பெரும் வரவேற்பு, இந்த புதிய மூன்றாவது சீசனை உருவாக்க காரணமாக அமைந்தது.
ஒரு வருடத்திற்கும் மேலாக அமர்ந்து, எங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்த அட்டகாசமான தருணங்களை இத்தொடரின் கருப் பொருளாக உருவாக்கியுள்ளோம். இன்றைய குடும்பங்களில் தினசரி நடக்கும் பொதுவான அம்சங்களின் அடிப்படையில், இந்தப் புதிய சீசனை உருவாக்கியுள்ளோம். இது ரசிகர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதோடு, பார்வையாளர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கும்…” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *