திருச்சி மாவட்டம் முசிறி அருகே பிறந்த குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்ததால் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கைவைத்தியம், சுயமாக மருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பாரம்பரியமாக சித்தமருத்துவம் முக்கிய மருத்துவ முறையாக உள்ளது. ஆனால் சில முறையாக மருத்துவம் படிக்காத அரைகுறை வைத்தியர்கள், கைவைத்தியம் எனப்படும் செவி வழி கேட்ட மருத்துவ முறைகளில் இன்னும் கிராமப் புறங்களில் கடைபிடிக்கப்படுகிறது.
யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது பிறந்த குழந்தை காதில் எண்ணெய் காய்ச்சி ஊற்றுவது குடிக்க வேப்பெண்ணை மற்றும் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கொடுப்பது போன்ற சில வழிமுறைகள் தமிழகத்தில் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஆனால் இந்த முறை வைத்தியங்கள் காரணமாக குழந்தைகள் உயிரிழக்கும் அபாயமும் உள்ளது இந்த நிலையில் திருச்சி அருகே பிறந்த குழந்தைக்கு விளக்கெண்ணை கொடுத்ததால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் ,முசிறி அருகே அய்யம்பாளையத்தில் சேர்ந்தவர் பாலமுருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இருவருக்கும்ஒன்றரை வயதில் பிரதீப் குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக பாலமுருகன் மனைவி சாந்தி.அவரது தாய் வீடான முத்தையநல்லூர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு 20.10.2021அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு சன்விகா என பெயரிட்டு வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 16.11.2021 அன்று குழந்தையின் வயிற்றை சுத்தம் செய்வதற்காக குழந்தையின் தாய் சாந்தி குழந்தைக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்துள்ளார். இதில் அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் அருகிலுள்ள தண்டலை புத்தூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை சன்விகா 30.12.2021 அன்று பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெம்பநாதபுரம் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கை வைத்தியம் மற்றும் மருந்தகங்களில் சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொள்வது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது . மருத்துவம் படிக்காத நபர்களிடம் மருத்துவம் செய்து கொள்வதாலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற தவறை பொதுமக்கள் செய்யக்கூடாது. மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.