மதுரையில், பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்யாமல் உள்ள திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை டிஎம் கோர்ட் பகுதியில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரிய உள்ளான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்!
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், இன்றைக்கு திமுக அரசையும், மதுரை மாநகராட்சியை கண்டித்தும் தானாக சேர்ந்த கூட்டமாக மக்கள் பங்கெடுப்புடன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மாற்றான் தாய் மணபாங்குடன் மதுரையை பார்த்து வருகிறது திமுக அரசு. சாலை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் சிரமம் பட்டு வருவதை சரி செய்யாமல் 112 கோடியில் கலைஞர் நூலகம் கட்ட அரசாணை வெளியிட்டுள்ளனர். முல்லை பெரியாறு கூட்டுகுடிநீர் திட்டம், வைகை ஆற்று கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசாக கடந்த ஆண்டு 2500 ரூபாய் குடுத்த போது உதயநிதி ஸ்டாலின், கனிமொழி 5000 ரூபாய் குடுக்க சொன்னவர்கள், தற்போது கொரோனா மூன்றாம் அலையே வந்து விட்டது, தற்போது ஒரு ரூபாயும் வழங்கவில்லை. கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகைக்கடன் ரத்து என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை விடுத்து 13 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்து பொதுமக்களுக்கு துரோகம் செய்துள்ளனர்.
தமிழக நிதி அமைச்சர் மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடைபெற்று உள்ளது என்று பேசியவர், இதுகுறித்து நடவடிக்கை எடுத்திருக்கலாமே..? மதுரை மக்கள் ரோசக்காரங்க என்பதை இரட்டை வேடம் போடும் திமுக அரசுக்கு நிரூபிக்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெருவாரியாக வெற்றி பெற வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களை இன்றைக்கு வஞ்சித்து வருகிறது.’ என்றார்!