மதுரை திருநகர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் மதுமித்ரன் 33. ஐ.டி. ஊழியர். கடந்தாண்டு அப்பகுதியில் தன் பெயரிலும், மனைவி புஷ்பலதா 28, பெயரிலும் இரு மனைகளை வாங்கி, பத்திரப்பதிவு செய்தார். ஆனால் மனைவி பெயரில் மட்டுமே பட்டா வழங்கப்பட்டது. தன் பெயரில் பட்டா கேட்டு வருவாய்த்துறைக்கு ஆன்லைனில் மதுமித்ரன் விண்ணப்பித்தார்.

அவரை தொடர்புக்கொண்ட வேடர்புளியங்குளம் வி.ஏ.ஓ. யாசியாபானு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். பேச்சுவார்த்தைக்கு’ பின் ரூ.4 ஆயிரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லஞ்சஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. சத்தியசீலனிடம் மதுமித்ரன் புகார் செய்தார். இதற்கிடையே இன்று மதியம் அலைபேசியில் தொடர்பு கொண்ட மதுமித்ரனிடம், பசுமலை மூலக்கரை ஸ்டாப் அருகே காத்திருக்குமாறு யாசியாபானு தெரிவித்தார்.

சிறிதுநேரத்தில் அங்கு வந்து மதுமித்ரனிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கி அதை தனது ஸ்கூட்டியில் வைத்தபோது அவரை இன்ஸ்பெக்டர் குமரகுரு, ரமேஷ்பிரபு, சூரியகலா, ஜெயப்ரியா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.








