கோவை மாவட்டம், நரசீபுரத்தில், மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக, 40 ஆண்டுக்கால நண்பரைக் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவி ஆடு அறுக்கும் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொன்ற முதியவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை நரசீபுரம் வெள்ளிமலைப்பட்டினம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த நாகராஜ் (62) என்பவர் பாக்கு மட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது வீட்டின் அருகில் வசித்து வந்த கந்தசாமி (65) காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இருவரும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்து உள்ளனர்.
இந்நிலையில், மனைவியை இழந்து தனியாக வசித்து வந்த நாகராஜுக்கும், கந்தசாமியின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாகக் கந்தசாமி சந்தேகித்து உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த ஒரு மாதமாகத் தகராறு நிலவி வந்து உள்ளது.
இன்று காலை நாகராஜ் டீ வாங்கிக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் நரசீபுரம் தெற்கு ரத வீதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த கந்தசாமி, தான் மறைத்து வைத்து இருந்த மிளகாய்ப் பொடியை நாகராஜின் கண்ணில் தூவி உள்ளார்.
கண் எாிச்சலில் அலறிய நாகராஜை, ஆடு அறுக்கும் கத்தியால் கழுத்து, தலை மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் 6-க்கும் மேற்பட்ட முறை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கு இருந்து தப்பியோடினார். ரத்த வெள்ளத்தில் மிதந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆலந்துறை போலீஸார், நாகராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளியான கந்தசாமியைப் பிடிக்கப் போலீஸார் விரைந்த போது, அவர் தனது வலது கையைக் கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அவரை மீட்ட போலீஸார் கைது செய்து, சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து ஆலந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




