மதுரை மாவட்டத்தில் FQL ஆன்லைன் முதலீட்டு முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் பலர் பணத்தை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதலீட்டு மோசடியில் பணத்தை இழந்ததாகக் கூறி அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் கூடியுள்ளனர். தங்களிடம் முதலீடாக பெறப்பட்ட பணத்தை திருப்பித் தரவில்லை எனக் கூறி, போலீசாரிடம் புகார் அளிக்க அவர்கள் வந்துள்ளனர்.
FQL முறைகேட்டில் பணத்தை இழந்தவர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. புகார் அளிப்பவர்கள் வழக்கில் பாதிக்கப்பட்ட நபர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
புகார் அளிக்கும்போது பெயர், முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண், வங்கி கணக்கு எண், FQL அடையாள எண் உள்ளிட்ட முழுமையான விவரங்களை அளிக்க வேண்டும். புகார் அளிக்க காலக்கெடு எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், FQL நிறுவனம் சார்பில் பணத்தை திரும்ப வழங்குவதாகக் கூறி, அதற்காக மீண்டும் பணம் செலுத்துமாறு யாரேனும் கேட்டால் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அச்சமின்றி முழு விவரங்களுடன் புகார் அளிக்கலாம் என்றும், புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மதுரை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.




