மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட, கழனிவாசல் என்ற பகுதியில், மங்கைநல்லூர் புறவழிச்சாலை அமைந்துள்ளது, திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண்மணி, சென்னையிலிருந்து மயிலாடுதுறை வந்து இறங்கி, மயிலாடுதுறையில் இருந்து தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில், காலை நான்கு முப்பது மணி அளவில் கழனிவாசல் வழியே சென்றுள்ளார்.

அப்போது அங்கு குடிபோதையில் இருந்த ஒரு கும்பல், இருசக்கர வாகனத்தில் சென்ற ரமா பிரபா மற்றும் அவரது நண்பரை வழிமறித்து, வாய்க்கால் மதகுக்கு கீழே மறைவான இடத்திற்கு இழுத்துச் சென்று, இருவரையும் அடித்து துன்புறுத்தியதுடன், அவர் அணிந்திருந்த தங்க நகைகள், இரண்டு செல்போன்கள், வெள்ளி கொலுசு ஆகியவற்றை பறித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் அருண் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு ஒன்பது பேரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மறைவான இடத்தில், பாலியல் வன்கொடுமை செய்ததாக சம்பவ இடத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இது தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிவிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பலமுறை செல்போனில் அழைத்தும், அவர் அழைப்பை துண்டித்து விட்டார்.
இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் மங்கைநல்லூர் கடை வீதியில், இதே கும்பல் தகராறில் ஈடுபட்டதை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்திருந்த நிலையில், பெரம்பூர் காவல்துறையினர் இரவு நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும், காவல்துறையை அலட்சியமாக செயல்பட்டது இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.




