• Wed. Aug 19th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

பாலமேடு சாலையில் வங்கி மேலாளரை பட்டா கத்தியால் வெட்ட முயன்ற இளைஞர்..!

ByKalamegam Viswanathan

Aug 19, 2026

மதுரை மாவட்டம் பாலமேடு-மதுரை சாலையில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலமேடு பகுதியைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் நேற்று மாலை தனது காரில் வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவரது காருக்குப் பக்கவாட்டில் டூவிலரில் வந்த நாகபாண்டி என்ற வாலிபர் கார் மீது உரசி சென்றதாக கூறப்படுகிறது.

இதனைத் தட்டிக் கேட்க முயன்ற வங்கி மேலாளரிடம், அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்

என்னிடமே வாய் பேசுகிறாயா, நான் யார் தெரியுமா?” எனக் கூறி ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வங்கி மேலாளரை விரட்டிச் சென்று வெட்ட முயன்றுள்ளார்.

இந்த திடீர் தாக்குதல் முயற்சியால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநரும் மேலாளரும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சமும் பரபரப்பும் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் இதுகுறித்து பாலமேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பாலமேடு காவல்துறையினர், பொதுமக்களின் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து, அவரிடமிருந்த பெரிய பட்டா கத்தியைக் கைப்பற்றினர்.

இருப்பினும், காவல்துறையினர் விசாரணையின் போதும் அந்த இளைஞர் தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பாலமேடு செங்கல் காளவாசல் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வருவதும், அவர் மீது ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பதும் தெரியவந்துள்ளது.

தற்போது காவல்துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுபோதையில் சாலையில் பட்டா கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.