• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

யாசகம் எடுப்பது போன்று வீடுகளை நோட்டமிட்டு திருடும் வட மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் கொண்ட கும்பல்..,

BySeenu

Aug 13, 2026

கோவை, சிங்காநல்லூர் ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் உள்ள வீட்டில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொட்களைத் திருடிச் சென்ற கும்பல், மீண்டும் அதே வீட்டை நோட்டமிட வந்த போது பொதுமக்கள் பிடித்துக் கொடுத்தும், போலீஸார் ஆதார் கார்டு இல்லை எப்படி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக சிங்காநல்லூர் காவல் உதவி ஆணையரிடம் பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் அளித்து உள்ளார்.

​கோவை ஜி.வி. ரெசிடென்சி, சவுதர்ன் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் டி. வெங்கடாபதி ராஜா (Dr. D. Venkatapathy Raja). இவர் தனது புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டின் கீழ் தளத்தில் வைக்கப்பட்டு இருந்த சுமார் ரூ.1.80 லட்சம் மதிப்பிலான செப்பு கம்பிகள், ஏ.சி செப்பு குழாய்கள் மற்றும் மின் சாதனப் பொருட்களைக் கடந்த ஜூன் 8-ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று திருடிச் சென்று உள்ளது.

இது குறித்த முழுச் சம்பவமும் அங்கு உள்ள சி.சி.டி.வி (CCTV) கேமராவில் தெளிவாகப் பதிவாகி இருந்தது.

பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் இது குறித்துக் காவல் நிலையத்தில் புகாரளிக்கத் தயாராகி வந்த நிலையில், இன்று மதியம் 3.00 மணி அளவில் அதே திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அந்த வீட்டின் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் உளவு பார்த்து நோட்டமிட்டு உள்ளனர். முந்தைய சி.சி.டி.வி காட்சிகளை வைத்து அவர்களை அடையாளம் கண்ட வீட்டின் உரிமையாளர், அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் நயாரா பெட்ரோல் பங்க் அருகே வைத்து அவர்களைச் மடக்கிப் பிடித்துச் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்து தாமதமாக வந்த சிங்காநல்லூர் போலீஸார், பிடிபட்டவர்களை உடனடியாகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல், மெத்தனப் போக்குடன் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் காவல் நிலையத்திலும், “இவர்களிடம் எந்த அடையாளச் சான்றும் இல்லை, என்ன செய்ய முடியும் ?” எனக் கூறி வழக்குப் பதிவு செய்யாமல் தங்களைச் சமாதானப்படுத்தி அனுப்ப முயன்றதாகப் பாதிக்கப்பட்டவர் குற்றம் சாட்டி உள்ளார்.

​மேலும், அதே கும்பலால் தங்களது கடையில் பொருட்கள் திருடப்பட்டதாகக் கூறி மற்றொரு தம்பதியினரும் புகார் அளிக்க வந்த நிலையில், அவர்களது புகாரையும் போலீஸார் அலட்சியப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் இச்சம்பவம் தனி நபர் திருட்டு அல்ல என்றும், சிங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வரும் ஒரு பெரிய கும்பலின் வேலையாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. எனவே, சிங்காநல்லூர் காவல் உதவி ஆணையர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டாக்டர் வெங்கடாபதி ராஜா அளித்து உள்ள மனுவில் கூறியுள்ளார்.

​பொதுமக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட நபர்களின் உண்மை அடையாளம், முகவரி மற்றும் பின்னணியைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும். ஜூன் 8 அன்று நடந்த திருட்டுச் சம்பவம் மற்றும் இன்று வீட்டை நோட்டமிட்ட சம்பவங்களின் சி.சி.டி.வி காட்சிகளைப் பரிசீலித்து, உரிய வழக்குப் பதிவு (FIR) செய்ய வேண்டும். இந்தத் திருட்டுக் கும்பலின் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகள் யார் ? என்பதைக் கண்டறிய வேண்டும்.

இவர்களுக்குத் தமிழக அளவிலோ அல்லது பிற மாநிலங்களிலோ ஏதேனும் பழைய குற்றப் பின்னணி உள்ளதா ? என்பதை ஆராய வேண்டும். இதே கும்பலால் பாதிக்கப்பட்ட மற்றொரு தம்பதியின் புகாரையும் முறையாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்றும், ​பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும், அப்பகுதி பொதுமக்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பையும், இரவு நேர ரோந்துப் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், ​பட்டப் பகலிலேயே திருடிய இடத்திற்கே மீண்டும் வந்து நோட்டமிட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் குற்றச் சம்பவம் எதுவும் நடப்பதற்கு முன்பாக போலிஸ் உயர் அதிகாரிகள் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.வி. ரெசிடென்சி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.