திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ ,மாணவிகள் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
பேரணியை பள்ளி தாளாளர் அருள் தந்தை சேசு ஆரோக்கியம் துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஞானசீலா அனைவரையும் வரவேற்றார். வடமதுரை எஸ்.ஐ. நாகலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.

பேரணி பள்ளியில் துவங்கி சிலுவத்தூர் ரோடு, மா.மு கோவில் பிரிவு, கஸ்தூரி நாயக்கம்பட்டி வரை சென்று, சிலுவத்தூர் ரோடு வழியாக மீண்டும் பள்ளி திரும்பியது. இதில் பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் பேசியதாவது: மாணவர்கள் எதை இழந்தாலும் பெற்றுக் கொள்ளலாம் ஒழுக்கத்தை இழந்தால் திரும்பப் பெற முடியாது. வாழ்வும் வளம் பெறாது. சிறுவர்கள் உங்கள் பெற்றோர்கள் நண்பர்கள் உறவினர்களிடம் போதை பொருள் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

அரசுக்கு இந்த விஷயத்தில், நம் நூறு சதவீதம் உதவ வேண்டும். ஆடு மாடுகள் ஐந்தறிவு ஜீவன்கள் தான். ஆனால் அவை விஷ செடிகளை தின்று உயிரிழந்ததாக வரலாறு இல்லை. ஏராளமான விஷச் செடிகள் இருந்தாலும் அவற்றை கண்டுபிடித்து ஆடு, மாடுகள் உண்பதில்லை. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் புகையிலைப் பொருட்கள் கெடுதி என்று எழுதியிருந்த போதும், மது பாட்டில்களில் மது உடலுக்கு கெடுதி என்று எழுதி இருந்த போதும் அதை உண்டு வாழ்க்கையை இழப்பது அறியாமையின் உச்சமாகும்.

போதை முற்றிலும் நம் ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பேரணிக்கான ஏற்பாடுகளை என். எஸ் .எஸ். மாணவர்கள் செய்திருந்தனர். என் எஸ் எஸ் ஆசிரியை ஹெலன், போதை ஒழிப்பு தடுப்பு விழிப்புணர்வு ஆசிரியை பானுப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.






