• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதவிகளை ஏற்க மாட்டோம்: எஸ் பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம் கூட்டாக அறிவிப்பு…

ByS.Ariyanayagam

Aug 3, 2026

பழனியில் எம்.எல்.ஏ அலுவலகத் திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி, தலைமை அறிவித்த புதிய பதவிகளை ஏற்க மறுத்துக் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், தோல்விகள் குறித்து ஆராயாமல் நிர்வாகிகளை நீக்குவதைக் கண்டித்த அவர், சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்தால் மட்டுமே கட்சி மீண்டும் எழுச்சி பெறும் என்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதிதாகத் திறக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி, சி.வி .சண்முகம் நத்தம் விசுவநாதன் ஆகியோர் கூட்டாக கூறியதாவது:

கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் எங்களுக்குப் புதிய பொறுப்புகளை அறிவித்திருந்தார். ஆனால், நானும் அண்ணன் நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட 10 மூத்த தலைவர்கள் இணைந்து, தலைமை அறிவித்த புதிய பொறுப்புகளை (துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட) ஏற்க முடியாது என ஏற்கனவே தெளிவாகக் கடிதம் கொடுத்துவிட்டோம். நாங்கள் சாதாரணத் தொண்டர்களாகவே தொடர்கிறோம்.
​முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வருவதற்கு அண்ணன் சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் என அனைவரும் ஆதரவு அளித்தோம். பழைய பொறுப்புகள் அப்படியே தொடரும் என்ற வாக்குறுதியின் பேரிலேயே இணைந்து பணியாற்றினோம். ஆனால், சொன்ன வார்த்தை காப்பாற்றப்படவில்லை.
​நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து ஆராயப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், முடிவுகளை எடுக்கக் கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால், தோல்விகளை ஆராயாமல் தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
​சசிகலா, டி.டி.வி தினகரனை இணைக்கக் கோரிக்கை வைத்தனர்.
​அண்ணா அ.தி.மு.க என்பது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிக் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி, அம்மா அவர்களால் வழிநடத்தப்பட்ட கட்சி. ஆனால், இன்றைக்கு நமது கட்சி 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. த.வெ.க (தமிழக வெற்றி கழகம்) ஆளுங்கட்சியாகவும், தி.மு.க எதிர்க்கட்சியாகவும் இருக்கும் சூழலில், அ.தி.மு.க 3-வது இடத்தில் இருப்பது வேதனையளிக்கிறது. தி.மு.க-வை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே த.வெ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தோம்” ​என்று எஸ்.பி. வேலுமணி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.