புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டவர் விமல். புதுக்கோட்டையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மூன்று தொகுதி பாரதிய ஜனதாவுக்குச் சென்றுவிட மூன்று தொகுதிகளில் மட்டுமே அதிமுகவினர் போட்டியிட்டனர்.

அந்த வகையில் அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த விஜயபாஸ்கர் விராலி மலையிலும் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த வைரமுத்து திருமயம் தொகுதியிலும் போட்டியிட்டனர். கட்சி தொண்டனாக இருந்து சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டது விமல் ஒருவர்தான். அப்போது வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த விஜயபாஸ்கர் ஆலங்குடி வேட்பாளர் விமலிடம் நான்கு கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் வாங்கி இருக்கிறார். அது தேர்தல் போட்டியிடுவதற்கு தகுதியை வளர்த்துக் கொள்வதற்காக என்று அப்போது சொல்லப்பட்டது. வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டவுடன் அந்த பணம் திருப்பி தரப்படும் என்று கூறி பணத்தை வாங்கி இருக்கிறார்கள்.
ஆனால் 50 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டு நான்கு கோடி ரூபாயை இதுவரை திருப்பிக் கொடுக்கவில்லை என்று தற்போது விமல் பரபரப்பாக புகார் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து தற்போது அதிமுகவின் மாவட்ட செயலாளர்களான பழனிவேல், ராமு, கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் இன்று தொண்டர்களிடம் கருத்து கேட்டு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமும் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையின் பெயரில் தான் நடந்திருக்கிறது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விமல் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் கொடுக்க இருக்கிறோம். அதேபோல் முன்னாள் மாவட்டச் செயலாளராக இருந்து பணத்தை வசூலித்து திருப்பி தராமல் இருக்கும் விஜயபாஸ்கர் தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சென்று விட்டார்.

எனவே அக்கட்சியின் மாவட்ட செயலாளரும் அமைச்சருமாக இருக்கும் முகமது பர்வேசிடம் போய் எடுத்துச் சொல்லி கேட்பது என்று முடிவு செய்து இருக்கிறோம் என்றனர். அதன்படி முகமது பர்வேசிடம் அவரது வீட்டுக்குப் போய்ப் பேசிய போது ஒரு வாரத்திற்குள் எப்படியும் பணத்தை பெற்று தருகிறேன். தற்போது காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அதிமுகவினர் கலைந்து சென்றனர்.




