கோவை, அன்னூர் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் – விஜயலட்சுமி தம்பதியினர் அப்பகுதியில் பழக்கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை நேரத்தில் இவர்களது கடைக்கு நல்ல உடைகளை அணிந்த இளம்பெண் ஒருவர் வந்து உள்ளார். கடையில் இருந்த விலை உயர்ந்த நட்ஸ் பாக்கெட்டை எடுத்த அந்தப் பெண், அதற்குரிய பணத்தை ‘ஜி-பே’ செயலியில் உடனடியாக அனுப்பிவிடுவதாகக் கூறி நைஸாகப் பேச்சுக் கொடுத்து உள்ளார்.

பின்னர், கடையில் இருந்தவர் பழங்களை எடை போட்டுக் கொண்டு இருந்த கவனச்சிதறலான நேரத்தைப் பார்த்துப் பயன் அடைந்த அந்தப் பெண், சட்டென்று மேஜையில் இருந்த ஆப்பிள் ஒன்றையும் தூக்கிக் கொண்டு நைஸாக அங்கு இருந்து மின்னல் வேகத்தில் தப்பி உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த கடைக்காரர் “ஆப்பிளை எடுத்துட்டு போகுது… ஆப்பிளை எடுத்துட்டு போகுது…” எனக் கத்திக்கொண்டே சிறு தூரம் துரத்திச் சென்றும், அந்தப் பெண் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார்.

இளம்பெண் ஒருவர் மிகவும் சாதுர்யமாக ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செய்வதாக ஏமாற்றி, பழங்களையும் நட்ஸ்களையும் திருடிச் சென்ற இந்த முழுச் சம்பவமும் கடையில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் அச்சு அசலாகப் பதிவாகி உள்ளது. தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ காட்சி, அன்னூர் பகுதி வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.




