நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களிடம் தவறான புரிதல்களை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை தடுத்து, தேர்வின் நம்பகத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருவண்ணாமலை ஆதீனம் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அந்த மனுவில், இந்தியா முழுவதும் உள்ள மாணவ, மாணவிகளுக்கு சமமான மருத்துவக் கல்வி வாய்ப்பை உறுதி செய்வதில் நீட் தேர்வு முக்கிய பங்காற்றுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீட் தேர்வு தொடர்பான சட்ட நடைமுறைகள் நிறைவடைந்து நாடு முழுவதும் அமலில் உள்ள நிலையில், அதுகுறித்து மாணவர்களிடம் தவறான தகவல்கள் மற்றும் புரிதல்களை பரப்புவதால் அவர்களின் மருத்துவக் கல்வி கனவுகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேர்வு பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்தி, நீட் தேர்வை முழு வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மத்திய, மாநில அரசுகள் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும், மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




