தேனி மாவட்டம் சின்னமனூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கூடலூர் நகர தலைவர் ஆர். பி. ஜெகன் மீது பொய் வழக்கு பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் கூடலூர் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

தொடர்ந்து, ஆடி மாதம் என்பதால் அனைத்து அம்மன் கோவில்களிலும் பெண் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தேனி மாவட்ட காவல்துறை சார்பாக முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், தேனி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகளை வாடகைக்கு எடுத்து, அதை விதிகளை மீறி மாற்று மதத்தினருக்கு உள்வாடகைக்கு விடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேற்கண்ட கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அறப்போராட்டம் நடத்த தேதி முடிவு செய்யப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அனுமதி பெற்று மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட செயலாளர் சமயகுமார், கோட்ட பொறுப்பாளர் கண்ணாயிரம், மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் நகர், ஒன்றிய பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.




