• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ஈஷாவின் இலவச செஸ் பயிற்சி..,

BySeenu

Jul 21, 2026

கோவை நரசீபுரத்தில் நடைபெற்ற குறுமைய அளவிலான செஸ் போட்டியில், ஈஷா வழங்கிய பயிற்சி மூலமாக, 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் அரசுப்பள்ளியில் படிக்கும் பழங்குடியின மாணவி நிவேதா முதலிடம் பிடித்துள்ளார்.

​கோவை மாவட்டத்தில் குறுமைய அளவிலான செஸ் போட்டிகள், தொண்டாமுத்தூர் அருகே நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் 16.07.2026 (வியாழக்கிழமை) நடைபெற்றன. இதில், 70 அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

​இப்போட்டியில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், நரசீபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும், பட்டியார்கோயில்பதி என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த மாணவி நிவேதா முதல் பரிசு பெற்றார். இவர், அடுத்ததாக மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார்.

​இந்த குறுமையப் போட்டிகளில், 11 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டியில் ஈஷா வித்யா பள்ளி மாணவி பவ்யஸ்ரீ இரண்டாமிடம் பிடித்தார். 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் ஈஷா வித்யா பள்ளி மாணவி மூனு சௌஸ்திகா இரண்டாமிடமும், மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பூமிகா மூன்றாமிடமும் பிடித்தனர்.

​19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் நந்திதா முதலிடத்தையும் நந்தனா இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். அதே போன்று ஆண்களுக்கான பிரிவில் மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மிதுனேஷ் முதலிடத்தையும், ஈஷா வித்யா பள்ளி மாணவர் சச்சின் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.

இவர்கள் அனைவருக்கும் ஈஷா சார்பில் செஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

​14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி நிவேதா இது குறித்து கூறுகையில், ”நான் உள்பட எங்கள் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு செஸ் குறித்த பெரிய அறிமுகம் கிடையாது. ஈஷா மூலமாக சுவாமி தத்யா, எங்கள் பழங்குடியின கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக செஸ் விளையாட்டை கற்றுத் தந்தார். அவரது பயிற்சியால் ஆர்வமுள்ள பலர் செஸ் விளையாட்டைக் கற்றுக் கொண்டோம். தற்போது நான் மாவட்ட அளவிலானப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறேன். தற்போது, குறுமைய அளவில் முதலிடம் பிடித்துள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

​பழங்குடியின கிராம மாணவர்களுக்கு செஸ் விளையாட்டில் பயிற்சி அளிக்கும் ஈஷாவின் முழுநேர தன்னார்வலரான சுவாமி தத்யா கூறுகையில், “ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் கிராம மாணவர்களுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்த, அவர்களுக்கு பயிற்சி அளிக்க துவங்கினோம். அவர்களும் ஆர்வத்துடன் செஸ் விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இன்று பெரும்பாலும் நகரப் பகுதிகளில் பொருளாதார வசதியுள்ள மாணவர்களால் மட்டுமே செஸ் விளையாட்டை தொடர்ந்து கற்றுக்கொண்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடிகிறது. பெரும்பாலும் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இந்த விளையாட்டில் பயிற்சியும் வாய்ப்பும் கிடைப்பதில்லை. ஆனால் முறையான பயிற்சியும் ஊக்கமும் அளித்தால் செஸ் போட்டியில் கிராமங்களில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெற்றி பெற முடியும் என்பதற்கு இவர்கள் சான்றாக விளங்குகிறார்கள்,” எனக் கூறினார்.