• Mon. Jul 20th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வெறிநாய் அட்டகாசம்: 30-க்கும் மேற்பட்டோர் காயம்..,

ByKalamegam Viswanathan

Jul 19, 2026

மதுரை மாநகரில் ஆரப்பாளையம் புட்டுத்தோப்பு பகுதியில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற வெள்ளை மற்றும் செவலை நிறம் கொண்ட நாய், வழியில் சந்தித்த பொதுமக்களை அடுத்தடுத்து கடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நாய்க்கடியால் காயமடைந்தவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர்.

18/07/26அன்று மாலை 6 மணி நிலவரப்படி, அரசு ராஜாஜி மருத்துவமனையின் புறநோயாளர் பிரிவில் 31 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 26 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அடங்குவர். காயமடைந்த அனைவருக்கும் வெறிநாய் தடுப்பூசி மற்றும் ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 4 பேருக்கு தையல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இதுவரை அரசு ராஜாஜி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் மொத்தம் 45 பேர் நாய்க்கடி தொடர்பாக சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

தற்போது பொதுமக்களை கடித்ததாக கூறப்படும் வெள்ளை மற்றும் செவலை நிறம் கொண்ட நாய் சென்னை சில்க்ஸ் பகுதியில் சுற்றித் திரிவதாக தகவல் பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், நாயைக் கண்டால் அதனை நெருங்காமல் உடனடியாக மாநகராட்சி அல்லது காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.