பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு பெருந்தலைவர் காமராஜரின் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு, அவரது 123-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம், பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை அனைத்து வியாபாரிகள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, பெருங்களத்தூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பாலமுருகன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளர், தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவராக காமராஜர் முன்னிறுத்தப்படுவதால், அவரது நினைவைப் போற்றும் வகையில் பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை தமிழக அரசு சூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாதவன், சுப்புராமன், பார்த்திபன், தினேஷ், குரு, ராஜா மற்றும் பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை குடியிருப்போர் சங்கத் தலைவர் மகேந்திரபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




