புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜய ரகுநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகில் உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற உள்ளவர்.

மேலும் மாநில மற்றும் பல்கலைக்கழக கூடைப்பந்து விளையாட்டு வீரராகவும் கடந்த காலங்களில் இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு பேராசிரியராக இருப்பதால் ஓய்வு காலத்தில் நூல்கள் எழுத வேண்டும் என நினைத்த விஜய ரகுநாதன் தொடர்ந்து விளையாட்டு, யோகக் கலை பற்றி தொடர்ந்து பல்வேறு வகையில் புத்தகங்களை எழுதி வருடம் தோறும் ஒரு புத்தகத்தை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி இதுவரை இன்றைய யோகா நிலையில் சித்தர் பாடல்களின் பயன்பாடும், யோகாசனங்களும் சித்த வைத்தியமும் ஒலிம்பிக்ஸ் விளையாட்டு உலக ஜாம்பவான்களும், யோகாவும் உடல் நலமும், கால்பந்து உடலை நலமாக்கிடும், யோகா,
இந்திய விளையாட்டு வீராங்கனைகள், யோகா ஆசிரியர்கள் விளக்கம், பிராணாயாமம், உலக விளையாட்டு வீரர்கள் என தொடர்ந்து பத்து வருடங்களாக வருடத்திற்கு ஒரு புத்தகம் என பத்து புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த வருடத்திற்கான காலம் தோறும் யோகா என்ற பதினோறாவது புத்தக வெளியீட்டு விழா இன்று அலுவல மன்றத்தில் நடைபெற்றது.
இதில் முனைவர் விஜய ரகுநாதன் எழுதிய காலம் தோறும் யோகா 11 வது நூலை தமிழ்நாடு அரசின் இயல் பாரதியார் விருது பெற்ற எழுத்தாளர் முருகேச பாண்டியன் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் நூலைப் பெற்றுக் கொண்டனர். அதேபோல் நிகழ்வில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கும் காலம் தோறும் யோகா என்ற நூலை வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் யோகாவை பற்றி விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இந்நிகழ்ச்சியில் மன்னர் கல்லூரி முதல்வர் பொறுப்பு சேதுராமன் தலைமை வகித்தார். அலுவலர் மன்றம் துணைத் தலைவர் முத்துக்கருப்பன், செயலாளர் அம்பிகாபதி, பொருளாளர் ஜான் பார்த்திபன், இணைச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வைத்தனர். மேலும் நூலின் பிரதிநிதிகளை ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் நாகேஸ்வரன், யோகா மாஸ்டர் செல்வராஜ் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் பாண்டியன், புதுகைவரலாறு சிவா, விஸ்வநாதன், சுரேஷ்குமார், அண்ணாமலை, கருப்பையா, சரவணன், செல்வராஜ், ராம்குமார், இளவழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நூல் குறித்த கருத்துரையை வனத்துறை அலுவலர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். நூல் குறித்த ஏற்புரையை நூலாசிரியர் விஜய ரகுநாதன் வழங்கினார். முருகன் நன்றியுரை ஆற்றினார்.





