புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் 36 ஆண்டுகளாக நகைக்கடை வைத்து தொழில் செய்து வருபவர் கணேசன் என்பவர். இப்போது தான் தொழில் செய்ய முடியாத அளவுக்கு சிலர் சேர்ந்து கடையை அடைத்து முடக்கி வைத்திருப்பதாகவும் கடைக்குள் வைத்துள்ள மூன்றரை கிலோ தங்கம் 25 கிலோ வெள்ளி ஆகியவற்றை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை பார்வையிட வேண்டும் என்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் நாடிமுத்து உதவியுடன் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த கணேசன் இந்த சம்பவம் குறித்து கூறுகையில்
நான் கடந்த 36 ஆண்டுகளாக புதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் சிவகாமி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை வைத்து நடத்தி வந்தேன். இந்நிலையில் அந்த கடையை நடத்தக் கூடாது என்றும் அந்தக் கடையை வேறு நபருக்கு விற்று விட்டதாகவும் கடையின் முதலாளி என்னிடம் தகவல் சொன்னார். இவ்வளவு காலமாக நான் தொழில் செய்து வருவதால் கடையை காலி செய்ய எனக்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு இருந்தேன். அதற்கு அவகாசம் அவர்கள் தருவதற்கு பதிலாக கடைக்கு செலுத்த வேண்டிய நகராட்சித் தொழில் வரியை கட்டடத்தின் உரிமையாளர் செலுத்தாமல் இருந்துவிட்டார்.
அதனால் நகராட்சியின் சார்பில் எனக்கு தொல்லை கொடுத்ததோடு கடைக்கு முன்னால் குப்பைத் தொட்டியை கொண்டு வந்து வைத்துவிட்டனர். ஒரு வழியாக எல்லாவற்றையும் சமாளித்து நான் தொழில் செய்து வந்த நிலையில் புதிதாக கடையை வாங்கி இருப்பதாக சொல்பவர்கள் கடந்த நான்கு வாரங்களுக்கு முன்பு கடையைத் திறக்க முடியாத அளவில் இரவு நேரத்தில் இரும்பு பட்டாவை வைத்து முன்பக்க கதவில் வெல்டிங் செய்துவிட்டனர். இதனால் நான் பூட்டை திறக்கவும் முடியாது கதவை உடைக்கவும் முடியாத நிலையில் இருக்கிறது. மேலும் இது குறித்து 2020 ஆம் ஆண்டு முதல் புதுக்கோட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் நடந்து வருகிறது.

வழக்கு நடப்பது ஒருபுறம் இருக்க இவர்கள் கடையை திறக்க விடாமல் செய்திருக்கும் நிலையில் கடையில் உள்ளே நான் வைத்திருந்த மூன்றரை கிலோ தங்கம் 25 கிலோ வெள்ளிப் பொருட்கள் அனைத்தும் என்ன நிலையில் இருக்கின்றன என்பது எனக்கு தெரியவில்லை. எனவே இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் வந்து உரிய காவல் அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். இனி அவர்தான் என்னை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.





