புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் வாணக்கன்காடு கிராமத்தில் அரசு சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்திற்கு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த தனிநபரின் பெயரில் “மாவீரன் கணேசன் நினைவு மண்டபம்” என பெயர் சூட்டப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததன் பேரில் பொது பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தின் முகப்பு பகுதியில் “மாவீரன் கணேசன் நினைவு மண்டபம்” என பெயர்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்டியலின மக்கள் உட்பட பிற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அந்தக் கூடத்தைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவன தலைவர் இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் பொதுச் செயலாளர் உதயா ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, நீலம் பண்பாட்டு மையத் தோழர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள்.
அந்த மனுவில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: அரசு நிதியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் 2. சர்ச்சைக்குரிய பெயர்ப் பலகையை உடனடியாக அகற்ற வேண்டும் 3. அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் வகையில் சமுதாயக்கூடத்தை மாற்றி அமைக்க வேண்டும். 4. சம்பந்தப்பட்ட இடத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி அருணா, உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். “வானக்கான்காடு கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தை நேரில் ஆய்வு செய்து, விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அரசு விதிகளின்படி, பொது நிதியில் கட்டப்படும் சமுதாயக்கூடங்கள் சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.





