செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரத்தில் அமைச்சர் சரத்குமார் தொடர்பான வீடியோ விவகாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் சரத்குமாரின் பள்ளி நண்பரான சரண் ஜெயராமன், தனது உயிருக்கும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த சரண் ஜெயராமன், திமுக ஆதரவாளராக இருந்து வருகிறார். அவர், அமைச்சர் சரத்குமாரின் பள்ளி கால நண்பர் என்றும் கூறப்படுகிறது.
சமீப நாட்களாக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், பல்வேறு தரப்பினரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், திமுக ஆதரவாளராக இருப்பதாலும், அமைச்சரின் பள்ளி நண்பர் என்பதாலும், அந்த வீடியோவை தான்தான் வெளியிட்டதாக சந்தேகித்து, கடந்த நான்கு நாட்களாக சிலர் தனது வீட்டின் முன்பு கத்தியுடன் சுற்றித் திரிந்து மிரட்டுவதாக சரண் ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உரிய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தாம்பரம் காவல் துணை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரண் ஜெயராமன், தன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தன்னை அச்சுறுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



