திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்து அரங்கம் நடந்தது. இதற்கு பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார்.

பள்ளி முதல்வர் ஞானசீலா முன்னிலை வகித்தார். என். எஸ். எஸ் . ஒருங்கிணைப்பாளர் ஹெலன் அனைவரையும் வரவேற்றார். இதில் திண்டுக்கல் மா.மு. கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் பத்மபிரியா, பகுதி சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், நெல்சன், சுகாதார செவிலியர் ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்து டாக்டர் பத்மபிரியா பேசியதாவது:
போதைப் பொருள் நம் உடல் நலத்தை முற்றிலும் கெடுக்க கூடியது.
பல இளைஞர்கள் வாழ்க்கையை தரிசாக மாற்றக் கூடிய போதைப் பழக்கத்தை நாம் கைவிட வேண்டும்.

ஒரு டி.வி. விளம்பரத்தில் ஒரு பெண் ஸ்ட்ரா போட்டு இளநீர் குடித்துக் கொண்டு இருப்பார். அவருக்கு புகையிலை போட்டதால் புற்று நோய் ஏற்பட்டு எலும்புகள் பாதிக்கப்பட்டு தாடை எலும்புகள் இல்லாமல் போனது. பலர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை முழுவதும் அவதிப்படுகிறார்கள்.
மாணவ, மாணவிகள் வருங்கால சமுதாயத்தின் விதை நெல்கள். நீங்கள் போதைப் பொருள்களுக்கு எதிராக இருக்க வேண்டும். உங்கள் உறவினர்கள் நண்பர்கள் யாராவது போதைப்பொருளில் சிக்கினால், உடனடியாக அவர்களை மீட்டு கவுன்சிலிங் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்காவது போதை பொருள் விற்பனை செய்யப்பட்டால், உடனடியாக எங்களுக்கு தகவல் கொடுத்தால் நாங்கள் அந்த இடத்தில் நடவடிக்கை எடுப்போம். உங்கள் எண்கள், தகவல்கள், ரகசியம் காக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி பேசும்போது: இப்போது இளைஞர்கள் கூலிப் என்ற புகையிலை பொருளை ஸ்டைலுக்காக போட்டு கடைசியில் அதற்கு அடிமையாகி வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள்.

வாழ்க்கையில் போதையில் சிக்காமல் இருக்க உடற்பயிற்சி மற்றும் விளையாட்டை நேசிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்பு மாணவ, மாணவிகள் போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.




