• Fri. Jun 12th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம்..,

BySeenu

Jun 12, 2026

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு
சிஐடியு கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜான் அந்தோணிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் கடந்த 23 ஆண்டுகாலமாகத் தற்காலிகமாகப் பணிபுரிந்து வரும் டாஸ்மாக் பணியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 60 ஆக மாற்றியமைக்க வேண்டும்.டாஸ்மாக் கடைகளுக்குப் பொருந்தும் 500 மீட்டர் தூரக் கட்டுப்பாட்டை, FL2 எனப்படும் மனமகிழ் மன்றங்களுக்கும் (Clubs) அமுல்படுத்த வேண்டும். உடையும் பாட்டில்களுக்கான சேதாரத் தொகையை வழங்க வேண்டும்.

காலி அட்டைப் பெட்டிகளுக்கான கழிவுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.
காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கு ஒப்பந்ததாரரே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.வேலுச்சாமி, சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில் பிரபு, மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், மற்றும் எல்பிஎப் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் ராக்கி முத்து, ஏஐடியுசி சார்பில் மாவட்ட செயலாளர் கணேசன் மாவட்டத் துணை செயலாளர் மணி, விற்பனையாளர் சங்கம் சார்பில் சுதாகர், கடை மேற்பார்வையாளர் தங்கம் சார்பில் முத்துப்பாண்டி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை விளக்கி நிர்வாகிகள் பேசியபோது. மாநிலம் முழுவதும் உள்ள 6,800-க்கும் மேற்பட்ட கடைகளில் பணியாற்றுவதற்காக, கடந்த 2003-ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சுமார் 36,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
கடந்த காலங்களில் 2014, 2015 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தலா 500 கடைகள் வீதம் மொத்தம் 1,500 கடைகள் மூடப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500 மீட்டருக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் கடைகளை கடந்த 12.05.2026 முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அதிரடி முடிவின் காரணமாக மாநிலம் முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியிழப்பைச் சந்தித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் மட்டும் 71 கடைகள் (வடக்கு கோட்டம் – 48, தெற்கு கோட்டம் – 23) மூடப்பட்டதால், 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், தற்போது இயங்கி வரும் மீதமுள்ள கடைகளில் பணியாளர்களுக்கான பணிப்பளு கணிசமாக உயர்ந்துள்ளது.
எனவே, இந்த மூடல் நடவடிக்கையால் கூடுதலாக உள்ள டாஸ்மாக் ஊழியர்களுக்கு, அரசின் இதர துறைகளில் மாற்றுப்பணி வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.