செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், முடிச்சூர் ஊராட்சி குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு 16 ஆம் ஆண்டு பாராட்டு விழா நடைபெற்றது.

முடிச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களின் சாதனைகளை பாராட்டி, அவர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி முடிச்சூர் குடியிருப்போர் நலசங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள் தொடர்ந்து கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள குடிமக்களாக உருவாக வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

மாணவர்களின் கல்விச் சாதனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்க முயற்சி என பொதுமக்கள் தெரிவித்தனர்.
300-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே மேடையில் கௌரவித்து அவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு ஊக்கமளித்த இந்த விழா, முடிச்சூர் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.




