காரைக்காலை அடுத்த வடமறைக்காடு பகுதியில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீவீரமாகாளியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மகோத்சவ பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு மகோத்சவ பெருவிழா கடந்த 16-ஆம் தேதி பந்தல் கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான இன்று திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் ஸ்ரீவீரமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து ஆலயத்தை வலம் வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

அதனை தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அம்பாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பால்குட அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். பால் கூட ஊர்வலத்தின் போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடியது காண்போரை கவரும் விதமாக இருந்தது. வரும் 30-ஆம் தேதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், அடுத்த மாதம் 07-ம் தேதி விடையாற்றி நிகழ்ச்சியுடன் வைகாசி மகோத்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.





