• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் மறியல்..,

ByKalamegam Viswanathan

May 23, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட அயப்பன் நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட குழு உறுப்பினர் வேல்பாண்டி தலைமையில் சுமார்200க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருவதாகவும், மது அருந்திவிட்டு சிலர் பள்ளி வளாகம் அருகே அத்துமீறி நடந்து கொள்வதாகவும் பெண்கள் குற்றம்சாட்டினர்.

குறிப்பாக இரவு நேரங்களில் மதுபோதையில் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் இரவு நேரங்களில் வெளியே செல்ல அச்சப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் குடும்பங்களில் குடும்ப வன்முறை, வருமான இழப்பு, குழந்தைகளின் கல்வி பாதிப்பு போன்ற சமூக பிரச்சினைகளுக்கும் மதுபானக் கடைகள் முக்கிய காரணமாக இருப்பதாக பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தினக்கூலி தொழிலாளர்கள் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதி மதுவுக்கு செலவாகுவதால் குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

வருகின்ற 30 ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது 30ஆம் தேதி டாஸ்மாக் கடை அகற்றப்படாவிட்டால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு கடைக்கு பூட்டு போடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட குழு உறுப்பினர் வேல்பாண்டி இந்த மதுபான கடையானது அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ளது தமிழக முதல்வர் அரசு பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில் தற்போது வரை இந்த கடையானது அகற்றப்படவில்லை மேலும் இந்த கடைக்கு உரிமை என்னும் இல்லாமல் செயல்பட்டு வருகிறது இது குறித்து அதிகாரிகளிடம் கூறினால் முறையான பதில் அளிக்க மறுக்கிறார்கள் முறைகேடாக மதுபானம் விற்பதாக சந்தேகம் ஏற்படுகிறது தொடர்ச்சியாக போராட்டம் நடத்திய பின்பும் பள்ளி மாணவிகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த மதுபானக் கடையை அகற்ற அதிகாரிகள் மறுக்கிறார்கள் இன்று நடைபெற்ற சாலை மறியலின் போது வரும் 30ஆம் தேதிக்குள் கடை உறுதியாக அகற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் 30-ஆம் தேதிக்குள் கடை அகற்றப்படாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி கடையை பூட்டு போட வேண்டிய நிலை ஏற்படும் என கூறினார்