• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

நாடு முழுவதும் கிராமோத்சவத்தை விரிவுபடுத்த இந்த அங்கீகாரம் உதவும் என சத்குரு கருத்து..,

BySeenu

May 20, 2026

ஈஷா கிராமோத்சவம்-2025 விளையாட்டுத் திருவிழாவின் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வான மணிகண்டனுக்கு, நாட்டின் முன்னணி வாலிபால் தொடரான பிரைம் வாலிபால் லீக்கில் பங்கேற்கும் சென்னை பிளிட்ஸ் அணியின் முதன்மை பயிற்சி முகாமில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பான சென்னை பிளிட்ஸ் அணியின் கடிதத்தில், “இந்தியா முழுவதும் விளையாட்டு கலாசாரத்தை வளர்ப்பதற்காக ஈஷா கிராமோத்சவம் மேற்கொண்டு வரும் குறிப்பிடத்தக்க பணியை நாங்கள் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறோம். கடந்த ஓராண்டாக ஈஷா கிராமோத்சவத்துடன் எங்களுக்கு ஏற்பட்டுள்ள தொடர்பு, கிராமங்களில் இருக்கும் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் பொதுவான நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மணிகண்டனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பு, அவரது தனிப்பட்ட திறமைக்கான அங்கீகாரமாக மட்டுமல்லாமல், ஈஷா கிராமோத்சவம் மூலம் உருவாகி வரும் ஆயிரக்கணக்கான கிராமப்புற வீரர்களின் திறனுக்கான அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்தாண்டு கிராமோவத்சவம் வாலிபால் போட்டிகளில் தனது துடிப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். இறுதிப்போட்டியில் இவரது அணி வென்றது. மணிகண்டன் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிராமப்புற விளையாட்டுப் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய மணிகண்டன், தற்போது சென்னை பிளிட்ஸ் அணியின் பயிற்சி முகாமில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இந்தத் தேர்வு குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மணிகண்டனுக்கும், கிராமப்புற திறமைகளை அங்கீகரித்து அவர்களை முதன்மை விளையாட்டு அரங்கிற்கு கொண்டு வரும் சென்னை பிளிட்ஸ் அணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த அங்கீகாரம், பாரதத்தின் கிராமப்புறங்கள் முழுவதும் ஈஷா கிராமோத்சவத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கான உத்வேகத்தையும் வேகத்தையும் வழங்கும்.” எனக் கூறியுள்ளார்.

சத்குருவின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் நடைபெறும் ஈஷா கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழா, கிராமப்புற மக்களிடையே விளையாட்டை ஊக்குவிப்பதுடன், இளைஞர்களிடையே போதைப் பழக்கத்தை ஒழித்தல், கிராமப்புற பெண்களை விளையாட்டுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் சுயமுன்னேற்றம் அடைய வழிவகை செய்தல் மற்றும் சாதிய வேறுபாடுகளைக் கடந்து சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் போன்ற நோக்கங்களுடன் நடத்தப்பட்டு வருகிறது.