கோவையில் டெக் கார்டு லேப்ஸ் ஃபவுண்டேஷன் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது..
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில், “டெக் கார்டு லேப்ஸ் ஃபவுண்டேஷன்” நிறுவனத்தின் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, கோயம்புத்தூரில் நிறுவனத்தின் புதிய அலுவலக துவக்கத்தையும், தொழில் மற்றும் கல்வித்துறைக்கான இணைய பாதுகாப்பு சேவைகளின் ஆரம்பத்தையும் குறிக்கும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

எஸ்.என்.ஆர்,சன்ஸ் அறக்கட்டளை, ஏரியல் பல்கலைக்கழகம், ப்ரோமிட்டய் லிமிடெட் மற்றும் IRA IDT ஆகியவற்றின் கூட்டாண்மையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான தொழில்நுட்ப ஒத்துழைப்பின் அடையாளமாக இந்த முயற்சி பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியை SNR அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன், இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ், அறங்காவலர்கள் ராமகிருஷ்ண விஜயகுமார் மற்றும் லக்ஷ்மிநாராயணசாமி துரைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக பயோஃபார்மாக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சங்கர் மோகன், டெக் கார்டு லேப்ஸ் ஃபவுண்டேஷன் துணை நிர்வாக இயக்குநர் டேவிட் பெலோஸ்டோஸ்கி, தலைமை வணிக அலுவலர் லலிந்திர முனசிங்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஏரியல் பல்கலைக்கழக ரெக்டர் பேராசிரியர் ஆல்பர்ட் பின்ஹசோவ் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அதிகாரி யாயிர் ஒஷெரோஃப் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். அவர்கள், உலகளாவிய இணைய பாதுகாப்பு தேவைகள், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் இந்தியா–இஸ்ரேல் ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.

தென்னிந்திய தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மேம்பட்ட சைபர் பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனம் செயல்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பல கல்வியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பான டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்கும் முக்கிய முயற்சியாக இந்த துவக்க விழா பார்க்கப்படுகிறது.




