சோழவந்தான் நாடார் தெருவில் அமைந்திருக்கும் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா ஆறு நாட்கள் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முதல் வாரம் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். முதல் நாள் வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர். இரண்டாம் நாள் அம்மனுக்கு பூச் சொரிதல் விழா, மூன்றாம் நாள் சக்தி கரகம் எடுத்து வந்து பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். நாலாம் நாள் காலை பால்குடம், மாலை அக்னி சட்டி, இரவு மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். ஐந்தாம் நாள் காலை கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜை சந்தனக் குடம்அபிஷேகம் பூஜை நடந்து. பிரசாதம் வழங்கப்பட்டது. அன்று மாலை பத்திரகாளி அம்மன் கேடயத்தில் உள்வீதி உலா வந்தது.இரவு அம்மன் ரிஷபாகனத்தில் நகர் வீதி உலா வந்தது. நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
ஆறாம்நாள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மஞ்சள் நீராட்டு விழா பூஜை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்குனி பொங்கல் திருவிழா குழுவினர், திருப்பணி குழுவினர், செயற்குழு உறுப்பினர்கள், நாடார் மகளிர் சங்கம், நாடார் இளைஞர் அணி ஆகியோர் செய்து இருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.




