• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

பேருந்து நிலையத்தில் போதையில் உறங்கியவரிடம் திருட்டு: வீடியோ எடுத்த கல்லூரி மாணவி..,

BySeenu

Mar 20, 2026

கோவையின், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், மது போதையில் உறங்கிக் கொண்டு இருந்த ஒருவரிடம் நைசாகப் பணம் மற்றும் செல்போனைத் திருடிச் சென்ற இரு வாலிபர்களின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வெளியூர்களில் இருந்து வந்து தங்கிப் பணி புரிந்து வருகின்றனர். இதனால் காந்திபுரம் பகுதியில் உள்ள நான்கு முக்கியப் பேருந்து நிலையங்களிலும் எப்போதும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

​இந்நிலையில், நேற்று மாலை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் நபர் ஒருவர் மது போதையில் அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தார்.

இதனை நோட்டமிட்ட இரண்டு வாலிபர்கள், அந்த நபரின் அருகே அமர்ந்து சிறிது நேரம் அங்கும் இங்கும் பார்த்தனர். யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட திருடர்கள், உறங்கிக் கொண்டு இருந்தவரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் பணத்தை லாவகமாகத் திருடிக் கொண்டு அங்கு இருந்து சென்றனர்.

இந்தத் திருட்டுச் சம்பவத்தை அங்கு இருந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது செல்போனில் ரகசியமாகப் பதிவு செய்து உள்ளார். “அவர்களை அங்கேயே தட்டிக் கேட்டால் தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் என்று பயந்ததால், ஆதாரத்திற்காக வீடியோ எடுத்தேன்” என அந்த மாணவி பதிவு செய்து உள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் கோரிக்கை விடுத்து உள்ளனர்.