கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் பின் புறத்தில் அவரது வீடு உள்ளது.

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார். நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறமுள்ள ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 70 சவரன் தங்க நகை மற்றும் 20 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளை சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு சென்ற ரமேஷ்குமார், ஷட்டர் உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக சிங்காநல்லூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மோப்பநாய் மற்றும் தடயவியல் சோதனை நிபுணர்களுடன் தடயங்களை சேகரித்தனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை சேகரித்து அதன் அடிப்படையில் தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






