கோவை கருமத்தம்பட்டி – அன்னூர் சாலையில் உள்ள நல்ல கவுண்டன் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமத்தின் 26வது ஆண்டுவிழா, நன்கொடையாளர்கள் தின விழா மற்றும் மஹா ஷிவராத்திரி விழா ஆகிய முப்பெரும் விழா ஆசிரம வளாகத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

பிப்.14ம் தேதி ஆண்டு விழா நிகழ்ச்சியை அரசு அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், நன்கொடையாளர்கள், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் குருஜி ஷிவாத்மா ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து குருஜி ஷிவாத்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ஆதரவற்றவர்களுக்கு இலவசமாக உணவு, உடை, அடைக்கலம், கல்வி, மருத்துவம், சட்ட உதவி முதலியவற்றை இலவசமாக வழங்கி வருகிறோம். பிரபஞ்ச அமைதி ஆசிரமம் தமிழகம் முழுவதும்15 மாவட்டங்களில் இலவச கிளை காப்பகங்களையும், மூன்று பள்ளிகளையும் பொறுப்பெடுத்து நடத்தி வருகிறது. நீலகிரி கூடலூரில் மலைவாழ் குழந்தைகளுக்காகவே 100 குழந்தைகள் படிக்கின்ற பள்ளிகளை தத்தெடுத்து நடத்தி வருகிறோம்.

இனி வரும் காலங்களில் யார், யாரெல்லாம் உடல் நலம் பாதிக்கப்பட்டும், மனநலம் பாதிக்கப்பட்டும், பொருளாதார சூழ்நிலை பாதிக்கப்பட்டும் , சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டும் உள்ள மக்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவர்களுக்கு இலவசமாக இல்லங்கள் அந்தந்த கிராமங்களிலும், அந்தந்த நகரங்களிலும் உருவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதனடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், ஏழ்மையால் வாடுகின்ற தமிழர்களுக்கும் இலங்கையில் இலவச காப்பகம் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கு உங்கள் அனைவருடைய உதவியும், ஒத்துழைப்பையும், நிதியையும் வேண்டுகின்றோம். என்றார். விழாவை முன்னிட்டு, பரதநாட்டியம், நடனம், இசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.






