விருதுநகர்: 125 நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் திமுக அரசைக் கண்டித்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 1400-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் அதிமுக கொடியுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் கூட்டணிக் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, அமமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் பங்கேற்ற தொண்டர்கள் திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இந்த நிகழ்வில் அதிமுக கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கருப்பசாமி, எம்ஜிஆர் மன்ற மாநில துணைச் செயலாளர் கலாநிதி, வடக்கு மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் மச்சராஜா, கே.கே.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன், அமமுக நகரச் செயலாளர் கே.நாகராஜ், விருதுநகர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் கோ.சி.மாரியப்பன், நகரத் துணைச் செயலாளர் ஞானசேகரன், ஒன்றியத் துணைச் செயலாளர் கண்ணாயிரம் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னிலை வகித்தனர்.







