திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அருட் தந்தை ரூபன், நிர்வாக அதிகாரி அருட் தந்தை பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் ஞானசீலா அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு விருந்தினராக எமக்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆக்னல் ஜோஸ்பின் ராஜம் பங்கேற்று பேசியதாவது:
அறிவு வளர்ச்சிக்கு பள்ளிதான் படிக்கட்டு. ஆங்கிலத்தில் குழந்தைகள் பேசுவதை பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆசிரியர்கள் குழந்தைகளை அடிப்பது அவர்கள் நன்மைக்குத்தான் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். தேவையில்லாமல் எந்த ஆசிரியரும் குழந்தையை அடிக்க மாட்டார். காமராஜர் தான் படிக்க விட்டாலும் இந்த சமுதாயம் படிக்க வேண்டும் என்று நினைத்தவர்.
மாணவர்கள் நல் ஒழுக்கத்தை கற்று விவேகம் உள்ளவர்களாக மாறுவதற்கு இந்தப் பள்ளி உதவுகிறது. குழந்தைச் செல்வங்கள் வளர்ச்சியில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறார்கள். இறையருளால் உங்கள் குழந்தைகள், நல்ல வாழ்க்கை பெற்று, நல்ல பதவியைப் பெற்று வாழ நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.






