• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் பொங்கல் விழா..,

ByK Kaliraj

Jan 14, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் கலாச்சார மன்றம் சார்பில், பொங்கல் விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவின் முக்கிய நோக்கம், மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாட்டு விழிப்புணர்வை மேம்படுத்துவதாகும்.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கி உரையாற்றினார். தனது உரையில், மாணவர்கள் பாரம்பரிய விழாக்களில் ஆர்வமுடன் பங்கேற்று, கலாச்சார மதிப்புகளை உணர வேண்டும் என்றும், கல்லூரி வழங்கும் மேடை வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரையில், இந்த விழா ஒரு கொண்டாட்டம் மட்டுமல்லாமல், மாணவர்கள் நமது கலாச்சார பாரம்பரியத்தை ஆராய்ந்து அறிந்து கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது என குறிப்பிட்டார். கலாச்சார மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் எஸ். சரஸ்வதி, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் காட்டிய ஆர்வம் மற்றும் முயற்சிகளைப் பாராட்டினார்.

விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்கள் சிலம்பம், கும்மி, பறை ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்வுகளை நிகழ்த்தி, தமிழ்நாட்டின் செழுமையான பண்பாட்டையும் கிராமிய மரபுகளையும் வெளிப்படுத்தினர். மேலும், துறைவாரியாக மாணவர்கள் பொங்கல் சமைத்து பரிமாறி மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து “பொங்கல் கொண்டாட்டம் : அன்றும் இன்றும்” என்ற தலைப்பில் பட்டிமன்றம், நாட்டுப்புற நடனம், பாடல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பல துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.