• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

நீட் தேர்வால் மீண்டும் ஒரு உயிர்பலி

Byமதி

Dec 17, 2021

நீட் தேர்வால் தமிழகத்தில் மற்றுமொரு உயிர் பறிபோயுள்ளது. புழல் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்ற நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புழல் அடுத்த காவாங்கரையில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் சுஜித் (19).

இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மூன்று முறை நீட் தேர்வு எழுதி, கடந்த இரண்டு முறை தோல்வி அடைந்துள்ளார். இந்த முறை குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றார். இதனால் மருத்துவம் படிக்க இடம் கிடைக்குமா, கிடைக்காதா என்ற கவலையில் சுஜித் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு எப்படியாவது மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துவிடும் என்று நம்பி விடுமுறையில் நாடு திரும்பிய தந்தை ஆனந்தும், பல இடங்களில் முயன்றும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. இதனால் மாணவர் சுஜித் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வீட்டில் யாருமில்லாத நிலையில், மின்விசிறியில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த புழல் காவல்துறையினர் சுஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.