கோவையில் 30 நிமிடங்களில் 100 தோப்புக்கரணங்கள் மற்றும் 20 சூப்பர் பிரெய்ன் கலைகளை செய்து சிறுவர்,சிறுமிகள் உலக சாதனை செய்து அசத்தியுள்ளனர்.
சூப்பர் பிரெய்ன் யோகாவின் ஒரு கலையான தோப்பு கரணம் போடுவதால் உள்ள பயன்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள மவுண்ட் கார்மல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 3 வயது முதல் 10 வயது வரையிலான 77 சிறுவர்,சிறுமிகள் கலந்து கொண்டு 30 நிமிடங்களில் 100 தோப்புக்கரணங்களையும்,மேலும் மூளையின் திறனை மேம்படுத்தும் 20 கலைகளையும் செய்தனர்.
30 நிமிடங்களில் சிறுவர் சிறுமிகள் செய்த இந்த சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இதில் சாதனை செய்த சிறுவர் சிறுமிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் நீலமேகம் நிமிலன் மற்றும் மாவட்ட தலைவர் பாலமுரளி கிருஷ்ணன் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

இது குறித்து சாதனையை பதிவு செய்த நீலமேகம் நிமிலன் கூறுகையில், மூளையின் செயல்திறனை மேம்படுத்த பல்வேறு நுட்பங்கள் உள்ளன. சூப்பர் பிரெய்ன் யோகாவை முறையாக வழக்கமான முறையில் செயல்படுத்தினால் அறிவுத்திறனை முன்னேறச் செய்வதோடு,குழந்தைகள் கல்வி மற்றும் விளையாட்டில் அதிக கவனம் செலுத்த முடியும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மவுண்ட் கார்மல் நர்சரி பிரைமரி பள்ளியின் தாளாளர் வனிதா,சுகிர்தா ,சோழன் உலக சாதனை புத்தகத்தின் பொது செயலாளர்கள் த ஆர்த்திகா,திலகவதி,பெருமாள்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.