இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில், தன் இரு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு பெண், ரயில் பாதை ஒன்றைக் கடக்க முயன்றுள்ளார்.
ஆனால், சரியாக ரயில் பாதைக்கு நடுவே அவரது மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டது. அவர் எப்படியாவது முன்னோக்கிச் சென்றுவிட முயன்றும் அவரால் முடியவில்லை.இதற்குள் சற்று தொலைவில் ரயில் வந்துகொண்டிருப்பதைக் கவனித்ததும் அவர் தன் பிள்ளைகளை இறக்கிவிட, அவரது மகன் சென்று பாதுகாப்பாக அமர்ந்துகொள்ள, அவரது மகளோ எப்படியாவது தங்கள் மோட்டார் சைக்கிளை காப்பாற்றிவிட முயல்கிறார். அதைக்கண்ட தாயும் அவளுடன் இணைந்துகொள்ள, இருவருமாக அந்த மோட்டார் சைக்கிளை தண்டவாளத்திலிருந்து இழுத்து வெளியே எடுத்துவிட தங்களாலானமட்டும் முயற்சிக்கிறார்கள்.
அதற்குள் ரயில் அருகே வந்துவிட, தாயும் மகளும் விலகியோடும் அடுத்த கணம், வேகமாக வந்த ரயில் அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி, அதை தூக்கி வீசுவதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.விபத்தில் அந்த மோட்டார் சைக்கிள் மோசமான அளவில் சேதமடைந்துவிட்டது. அந்தப் பெண்ணுக்கும் பிள்ளைகளுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லையென்றாலும், அவர்கள் கடும் அதிர்ச்சியிலிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.