உவரி கடலில் ஒரு முறை குளித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கும்.. சுயம்புலிங்க சுவாமியை நினைத்தால் வாழ்வில் வழி பிறக்கும்
கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில்.
முன்னொரு காலத்தில் உவரி மணல் குன்றுகள் நிறைந்த பகுதிகளாக இருந்தது. கடம்பன் கொடிகள் அதிகமாக வளர்ந்து வந்ததால் கடம்பவனம் என்றும் அழைக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் வாழ்ந்த கோனார் குல பெண் ஒருவர் பால் வியாபாரத்திற்காக சென்றபோது கடம்பக் கொடி காலில் பட்டு பால் சிந்தியது. இவ்வாறு பல நாட்கள் ஒரே இடத்தில் பால் சிந்தியது. இதை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர் ஆவேசப்பட்டு கடம்பக்கொடியை புதர் என்று நினைத்து வெட்டினார்.
அப்போது அதிசயமாக கடம்பக் கொடியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது இதனால் செய்வதறியாது திகைத்த கோனார் இது பற்றி ஊர் மக்களிடம் கூறினார் இது குறித்து தகவல்கள் அறிந்ததும் மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த பகுதிக்கு வந்து பார்த்தனர் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து நின்றனர் அப்போது சுவாமியின் அருளால் அருள் வாக்கு கிடைத்தது.
ரத்தம் வடிந்த இடத்தில் சந்தனத்தை அரைத்து பூசினால் ரத்தம் வடிவது நின்றுவிடும் எனக் கூறி அந்த வனப்பகுதியில் சந்தன மரம் இருக்கும் இடத்தின் அடையாளத்தையும் கூறினார்
அவர் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற மக்கள் அங்கு சந்தன மரம் இருப்பதை பார்த்து வியப்படைந்தனர். பின்னர் சந்தன மரத்தின் கொம்பை எடுத்து அரைத்து ரத்தம் வந்த இடத்தில் பூசினார்கள். சந்தனத்தை பூசியதும் ரத்தம் நின்று விட்டது. உலகைக் காக்கும் பரம்பொருளான பரமேஸ்வரன் லிங்க வடிவில் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
மக்கள் ஓலையால் கூரை தேய்ந்து கோவில் எழுப்பினார்கள். சுவாமிக்கு பாலபிஷேகமும், நான்கு வேளை பூஜையும் செய்து வணங்கினர்.
சுவாமியின் அற்புத லீலைகள் சுவாமியின் அருமை பெருமைகள் அனைத்தும் நாடெங்கும் பரவியது கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தது உவரி சுயம்புலிங்க சுவாமியின் மேல் சந்தனத்தை பூசி ரத்தத்தை நிறுத்திய காரணத்தால் அவரை வழிபட வரும் பக்தர்களுக்கும், சந்தனத்தை மேனியெங்கும் பூசுவதற்கு கொடுக்கின்றனர்.
சுவாமியின் திருமேனியில் தினமும் சந்தனத்தை அரைத்து பூசுகின்றனர். தீராத நோய் உள்ளவர்களும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் சந்தனத்தை மருந்தாக்கி நலம் பெறுகின்றனர் சந்தனம் விபூதியை தண்ணீர் கலந்து அருந்துகின்றனர்
இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில் தைப்பூசம் அன்று கொடியேற்றப்பட்டு பத்து நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறும்.
வைகாசி விசாகத் திருவிழாவின் போது சுவாமி அன்பே சிவமாக சிவமே முருகப்பெருமானாக மகர மீனுக்கு காட்சி கொடுப்பார். இங்கு இந்த விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. தை அமாவாசை, மாசி சிவராத்திரி, பங்குனி உத்திரம், சித்திரை விசு வருஷாபிஷேகம், ஆடி அமாவாசை, பிரம்மசக்தி அம்மாள் ஆவணி திருவிழா தீர்த்தவாரி நவராத்திரி கொலு விஜயதசமி, ஐப்பசி விசில், திருக்கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை போன்ற திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும்
சுவாமியுடன் உமாதேவியின் உக்கர அம்சமான பிரம்மசக்தி அம்பாள் கோயில் உள்ளது உலகில் பிரம்ம சக்தி அம்மனுக்கு என்று முதலில் தோன்றிய கோவில்தான் இந்த கோவில் என்பது வரலாற்று ஆய்வுகளின் படி நிரூபிக்கப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் பரிவார தேவதைகளான முன்னோடி சாமி இசக்கி அம்மன் பேச்சியம்மன் மாடசாமி ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
இங்கு ஆண்டுதோறும் ஆவணி மாதம் இரண்டாவது வாரம் அம்பாளுக்கு கிராமிய முறைப்படி நான்கு சமுதாய மக்களும் ஒன்று கூடி நடத்தும் ஆவணி பெருவிழா கொடை தென்பகுதிகளில் மிகவும் பிரசித்திப் பெற்றது.
விநாயகர் கோவிலுக்கு மேற்கு பகுதியில் பிரசித்தி பெற்ற வன்னிய சாஸ்தா கோவில் உள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடக்கும். உவரி கோவிலில் காலை 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும் பகல் 11 மணிக்கு உச்சிகால பூஜையும் இரவு 8:30 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும் நடைபெறும் மார்கழி மாதத்தில் அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்படும்
திருநெல்வேலியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிழக்கு 25 கிலோமீட்டர் தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 35 கிலோமீட்டர் தூரத்திலும் உவரி சுயம்புலிங்க சுவாமி அமைந்துள்ளது.
ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி கோவிலில் பக்தர்கள் சிவனார் முன் தனது கோரிக்கைகளை வைப்பதற்கு ஒரு சம்பிரதாயத்தை இங்கே கையாளுகின்றனர்.
அதாவது கடலில் இருந்து மணலை எடுத்து வந்து கரையில் குவியலாக்கி விட்டு சிவனாரை வணங்குகின்றனர் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப 11 முறை 108 முறை என்று மணல் பெட்டி சுமக்கின்றனர்.
வேண்டுதல் நிறைவேறியதும் சுயம்புலிங்க சுவாமிக்கு பால் அபிஷேகம், சந்தனத்தால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். ஆடு, மாடு மற்றும் கோழிகளை காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு. அதுபோல் வீட்டில் எவரேனும் பிரச்சனையில் சிக்கி உள்ளார் என்றால் அல்லது தீராத நோயினால் அவதிப்படுகிறார் என்றால் உடனே அவரை இங்கு அழைத்து வந்து சுயம்புலிங்க மூர்த்தியின் பிள்ளையாக அறிவித்து உன் பிள்ளையை நீதானப்பா காக்கணும் என்று வேண்டுகின்றனர்
அதன் பின்…
