இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடத்தப்பட்ட முருகன் மாநாடு குறித்து “மாற்றம் தந்த முருக பக்தர்கள் மாநாடு – இந்த எழுச்சி திக்கெட்டும் பரவட்டும்” என்ற தலைப்பில் திண்டுக்கல்லில் இந்து முன்னணி கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது,

“மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாடு, இந்துக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தி இருக்கிறது. இந்து முன்னணி, இந்துக்களுக்காக வாதாட, போராட தொடங்கப்பட்ட இந்து முன்னணி, அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
திண்டுக்கல் மலைக் கோட்டையிலுள்ள அபிராமி அம்மன் கோயிலில் விக்ரகங்கள் இல்லை. இந்த கோயிலில் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
மலை மீது அமைந்துள்ள இந்த கோயிலை பார்வையிடுவதற்கு கூட தமிழக போலீஸார் அனுமதிப்பதில்லை. இந்த மலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட, சிலைகளை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்துவதற்கு மத்திய அரசிடம், மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.
கம்யூனிஸ்ட்கள், திமுகவினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். பழனி பாதயாத்திரை பக்தர்களின் ஓய்வுக்காக கட்டப்பட்ட விடுதிகளில், அரசியல் கட்சிகள் மாநாடு நடத்த அனுமதிக்கக் கூடாது.
மாநில அரசு சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுவதால், பெரும்பான்மையினர் மிரட்டப்படுகின்றனர்.
அபிராமி அம்மன் பக்தர்கள் மாநாடு திண்டுக்கல்லில் நடத்த திட்டமிட்டு வருகிறோம். இந்த மாநாட்டுக்கு அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்போம்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும். கடந்த ஆண்டு 15 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டினை அரசு தடுக்க முடியாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கு போதை கலாச்சாரமே காரணம். எனவே, போதைப் பொருள்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக உளவுத் துறை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல. ஆனால், இந்துக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆதரவு அளிப்போம்.
திண்டுக்கல்லைப் பொருத்தவரை, மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய துணை நிற்கும் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்தார்.