மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ரகுபதி கிருஷ்ணா கொண்டம்மாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெண்கள் பிள்ளை வரம் வேண்டியும் , திருமண நிகழ்வு நடைபெற வேண்டியும், வேண்டிக் கொண்டால் உடனடியாக அம்மன் அருள் பாலித்து நினைத்த காரியம் கைகூடும் என்பது இக் கோயிலின் தனிச் சிறப்பு.

இங்கு ஆடி மாதம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 50 ஆயிரம் வளையங்களுடன் கோவில் சிலை அலங்காரம் செய்யப்பட்டது.மேலும் வண்ண வண்ண மின்னொளிகளால் அம்மன் பிரதிபலித்த காட்சி அனைவரின் கண்களையும் ஈர்த்தன. இவ்விழாவினை முன்னிட்டு, மதுரை, விருதுநகர் , திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் இந்த வளையல் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
முன்னதாக,கோவில் வளாகத்தில் சன்னதி முன்பு 501 விளக்குப் பூஜையில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டு தாங்கள் வேண்டிய காரியங்கள் நிறைவேற வேண்டியும், பிள்ளை வரம் வேண்டியும், பெண்கள் திருமணம் நிகழ வேண்டியும் விளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் வேண்டிக் கொண்டனர்.
வடக்கம்பட்டியில் முனியாண்டி சுவாமி திருக்கோவில் எவ்வாறு பிரசித்தி பெற்றதோ, அதேபோல் இந்த கிராமங்களில் இருந்து வெளியூருக்கு வேலைக்குச் சென்றவர்கள் அனைவரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்வது முக்கிய நிகழ்வு. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் வளையல்களை பிரசாதமாக பெற்று சென்றனர். அத்துடன் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் வளைகாப்பு சாதங்கள் அன்னதானமாக வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் செய்திருந்தனர். இந்த விழாவில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெற்று சென்றனர்.