திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டியில் 50 ஏக்கர் பரப்பளவில் தாமரை கண்மாய் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கண்மாயில் நீர் வற்றியவுடன் ஊர் சார்பில் கண்மாயில் உள்ள அனைத்து மீன்களையும் சுற்று வட்டார பொதுமக்கள் அனைவரும் கட்டணம் ஏதுமின்றி பிடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிக்கும் சமத்துவ மீன் பிடித்திருவிழா நடத்துவது வழக்கம்.

தற்போது கண்மாயில் நீர் குறைந்ததால் மீன் பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறுகுடி, பூசாரிபட்டி, நல்லகண்டம், இந்திரா நகர், புதுப்பட்டி, லட்சுமிபுரம், தேத்தாம்பட்டி, மஞ்ச நாயக்கன்பட்டி, குப்பப்பட்டி, ஒடுகம்பட்டி, எட்டயம்பட்டி, அணை மலைப்பட்டி உள்ளிட்ட 18 பட்டி கிராம மக்களும் மற்றும் வெளி மாவட்டங்களான சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீன்பிடித் திருவிழாவில் ஒரே நேரத்தில் ஒற்றுமையாக கண்மாயில் இறங்கி கச்சா, வலை, கூடை மற்றும் ஊத்தா மீன் பிடி கூடைகளை கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் ஜிலேபி, குரவை, ரோகு, பாப்லெட், உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தது.
பொதுமக்களுக்கு 2 கிலோ முதல் 5 கிலோ எடை வரை மீன்கள் கிடைத்தது. கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்றனர்.