தொடர் விடுமுறையால் சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் படகுச்சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவதால் தேக்கடி படகுத்துறையில் கூட்டம் அலைமோதுகிறது.

சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். தற்போது ஈஸ்டர் மற்றும் கோடை விடுமுறை என்பதால் சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் அதிக அளவில் தேக்கடிக்கு வருகின்றனர். தேக்கடியில் யானைசவாரி, நேச்சர்வாக், மூங்கில் படகு சவாரி என பலபொழுது போக்கு அம்சங்கள் இருந்தாலும், படகுச்சவாரியின்போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம் என்பதால் இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் விருப்பத்தில் படகுச்சவாரி முதலிடம் வகிக்கிறது.
தேக்கடி ஏரியில் தற்போது கேரள சுற்றுலாவளர்ச்சிக்கழக மற்றும் கேரள வனத்துறையினரின் 6 படகுகள் சவாரி செல்கிறது. படகுச்சவாரிக்கு டிக்கெட் கட்டணம் ரூ 385 ஆகவும், நுழைவுக் கட்டணம் ரூ70 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஈஸ்டர் மற்றும் கோடை விடுமுறை என தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் தேக்கடிக்கு சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து தேக்கடி ஏரியில் தண்ணீர் குறைவாக உள்ளபோதும் சுற்றுலாப்பயணிகள் படகுச்சவாரி செல்ல ஆர்வம் காட்டுவதால் தேக்கடி படகுத்துறையில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் குறிப்பிட்ட அளவு பயணிகளுக்கே படகுச்சவாரிக்கு டிக்கெட் கிடைப்பதால் பலர் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.