கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் பதக்கங்கள் வென்று திரும்பிய சிவகங்கை கிராமப்புற மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு.
கடந்த 28,29ம் தேதிகளில் கோவாவில் யூத் & ஸ்போர்ட்ஸ் அசோஷியன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சிலம்பப்போட்டி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, குஜராத், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 10 மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற சிவகங்கையை சேர்ந்த 8 பேர் தங்கமும், 3 பேர் வெள்ளியும், 5 பேர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சொந்த ஊரான சிவகங்கைக்கு இன்று திரும்பினர்.
கோவாவில் இருந்து ரயில் மூலமாக ஊர் திரும்பிய சிவகங்கை வீரர்களுக்கு, சிவகங்கை- மதுரை சந்திப்பு சாலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்து அரண்மனை வாசல் முன்பாக, பெற்றோர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் வீரர்களுக்கு வெடி வெடித்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினர். பதக்கங்கள் பெற்று திரும்பிய அனைவரும் சிவகங்கையை சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.