இணையத்தில் வர்த்தகம் செய்வது போல் பணத்தை மோசடி செய்த நபரை கைது செய்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் வசிக்கும் நபர் எஃகு (steel trading) வர்த்தகம் மற்றும் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். கம்பெனிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக TRADE INDIA இணையதளம் மூலம் ஸ்ரீ முருகப்பா ஸ்டீல் & ஹார்டுவேர் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டு ரூபாய் 14,72,263/- பணம் செலுத்தி உள்ளார். அதன் பிறகு அவர் தான் மோசடி செய்யப்பட்டு பணத்தை இழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மேற்கொண்ட புலன் விசாரணையில் சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் (43) என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட சந்திரசேகரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மோசடியில் ஈடுபட்ட சந்திரசேகர் மீது தமிழ்நாட்டில் (மதுரை மற்றும் ஈரோடு), ஹரியானா, பெங்களூர், மும்பை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஆன்லைன் மூலம் வர்த்தக மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்து உள்ளதும், பல்வேறு மாநிலங்களில் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும் தெரியவந்து உள்ளது,

அவரது வங்கி கணக்கும் முடக்கப்பட்டு அதில் இருந்து மோசடிக்கு பயன்படுத்த லேப்டாப்கள், செல்போன்கள் மற்றும் வங்கி பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என்றும், சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தி உள்ளார்.